அனுமன் மகிமைக்கு பெரும் சான்றாக விளங்குவது "அனுமன் சாலீசா' என்னும் மந்திரமாகும். அடிப்படையில் அனுமன் ஒரு தெய்வீகப் பிறவி. ராம- லட்சுமணர்கள் பிறந்த அதே காலகட்டத்தில் புத்திர காமோஷ்டி யாகத்தின் பயனாகவும், அனுமனின் தாயான அஞ்சனை கும்பகத்தில் மூச்சை நிறுத்தி யோகத் தவமிருந்த நிலையிலும் கருத்தரிக்கப் பெற்றவன்.
அனுமனின் உயிர்மூலத்தில் சிவசக்தியின் ஸ்கலிதமும், வாயு பகவானின் உயிர்மூச்சும் இருப்பது அடுத்த விசேஷம்.
இப்படிப்பட்டவன் நட்சத்திரங்களில் "மூலம்' என்னும் நட்சத்திரத்தில் அவதரித்தவன். பிரம்ம பத்தினி சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் உருக்கொண்டவளாவாள்!
இந்த உலகிலுள்ள அத்தனை உயிர்களுக்கும் உயிர்க்காவலாக விளங்குவது அறிவே. ஓரறிவு கொண்ட ஒரு சிலந்திகூட வலைபின்னி, அதில் தனக்கான உணவை விழவைத்து பிறகுதான் அதை உண்டு ஜீவிக்கப் பார்க்கிறது. எனவே ஓரறிவில் தொடங்கி ஆறறிவு மனிதர்கள் வரையில் அவர்களுக்குக் காவலாக இருப்பது அறிவே! அந்த அறிவின் விரிவில் வருவதே கல்வி, ஞானம் போன்றவை. இந்தக் கல்வியும் ஞானமும் சப்தமாகிய மொழியால் அமைந்தவை. இந்த மொழிக்கு மூலமாக விளங்குபவளே சரஸ்வதி. இந்த மூலத்தில் முளைத்த அனுமனும் பெரும் கல்வி, ஞானம் இவற்றை அருளும் ஆற்றல் படைத்தவன். அதற்குக் காரணம் அவன் புலன்களை அடக்கி தியானிக்க முடிந்தவனாக இருப்பதுதான்.
தியானம் எல்லாருக்கும் வசப்பட்டு விடாது. அதற்கு பெரும் மனவலிமை வேண்டும். அடுத்து தியானமே அறிவாகிய மனதிற்கு பெரும் மருந்தாகவும் திகழ்கிறது. இந்த உண்மை நமக்குத் தெரிந்திட நமக்கு நல்ல விதியமைப்பு இருக்கவேண்டும். இல்லாதபட்சத்தில் மனதை அடக்கமுடியாமல் அதன் பின்னே செல்பவர்களாகவே நாம் இருப்போம்.
மனதை அடக்க முனைபவர்களுக்கு மகத்தான மந்திரமாக விளங்குவது ராம நாமம்! அனுமன் அந்த ராம நாமத்தைக் கூறியே பெரும் தியான சுந்தரனாகத் திகழ்கிறான்.
இப்படித் திகழ்பவனை நாம் நமக்கான இஷ்ட தெய்வமாக ஆக்கிக்கொண்டு சுலபமாக முக்தியை அடைந்துவிட முடியும். இவன் பக்திக்கு உதாரணமாகத் திகழ்பவன். அதனாலேயே இவன்பால் பக்தி கொண்டவர்க்கு இவன் எளிதில் வசப்பட்டுவிடுகிறான்.
இவனை உபாசனா மூர்த்தியாகக் கருதி பலர் இவனது தரிசனம் பெற்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல; இவனை உபாசிப்பவர்கள் இடும் கட்டளையை இவன் க்ஷணத்தில் செய்து முடிப்பவனும்கூட! இப்படிப்பட்ட அனுமனை உபாசிக்க நிறைய மந்திரங்கள் உள்ளன. அதில் உன்னதமாய்த் திகழ்வதுதான் அனுமன் சாலீசா!
இதை முதியவர்களைவிட இளம்பிள்ளைகள் எளிதில் மனப்பாடம் செய்துவிட முடியும். பிள்ளைகள் வரையில் அதிகபட்சம் ஒன்பது முறை இதைச் சொல்லி முடிப்பதற்குள் இது மனப்பாடமாகிவிடும்.
இந்த அனுமன் சாலீசாவை எழுதியவர் இந்தி மொழியில் "ராமசரித மானஸம்' என்னும் நூலை இயற்றிய துளசிதாசர் ஆவார்.
இதில் ஒரு ஆச்சரியப்படும் விஷயமும் உள்ளது.
துளசிதாசர் ராமசரித மானஸம் எழுதக் காரணமே அனுமன்தான். துளசிதாசர்முன் தோன்றி அவருக்கு கவியாற்றலை அனுமன் அளித்திட, அதன்பின் பிறந்ததுதான் ராமசரித மானஸம்! இதனால் துளசிதாசர் தன் குருவாய்க் குறிப்பிடுவது அனுமனைத்தான். "அனுமனே என்னுள் இருந்து கொண்டு என்னை இயக்கி ராமசரிதையை எழுத வைத்தான்' என்னும் துளசிதாசர், மிகுந்த நெகிழ்ச்சியோடு எழுதியதுதான் அனுமன் சாலீசா!
திருக்குறள்போல நாற்பது ஈரடிகளில் அமைந்துள்ளது இது!
இந்த அனுமன் சாலீசாவுக்குப் பின்னே பெரும் வெற்றிக்கதை ஒன்று உண்டு.
நமக்கு எப்போதுமே பெரும் தலைவலியாக இருந்துவரும் ஒரு நாடு உண்டென்றால் அது பாகிஸ்தான்தான். 1965-ல் பாகிஸ்தானுக்கும் நமக்கும் பெரும்யுத்தம் ஏற்பட்டது.
நமது பாரத நாடு சுதந்திரம் பெற்று அப்போதுதான் ஓரளவு நிமிர ஆரம்பித்திருந்தது. இந்த நிலையில் இந்தப் போர் ஏற்படவும், அதனால் பெரும் பொருளாதாரப் பின்னடைவும் நம் நாட்டுக்குள் கட்டுப்படுத்த முடியாதபடி விலைவாசி உயர்வும் ஏற்படத் தொடங்கியது.
இந்த நிலை தொடர்ந்தால் நம் பாரத நாடு சுதந்திரம் பெறுவதற்குமுன் இருந்த மிகத் தாழ்ந்த நிலைக்குச் சென்றுவிடும் ஒரு ஆபத்தும் ஏற்பட்டுவிட்டது.
ஒன்று யுத்தம் மிக விரைவாக நடந்து முடியவேண்டும்- அதோடு யுத்தத்தில் பாரதம் கட்டாயம் வெற்றியும் பெற்றாகவேண்டும். இது நடக்காத பட்சத்தில் நம் நாட்டைக் காப்பாற்ற கடவுளால்கூட முடியாது என்று பலரும் பேசத் தொடங்கிவிட்டனர்.
அப்போது ஒரு சிந்தனையாளர் நாம் பெரிதும் போற்றும் காஞ்சி முனிவரைச் சந்தித்தார். முனிவரிடம் பாகிஸ்தானுடன் நடந்துவரும் யுத்தம் பற்றி கூறியவர் மேற்கண்ட ஆபத்துக்களையும் எடுத்துக் கூறியதோடு, காஞ்சி முனிவரிடம் வருத்தத்தோடு ஒரு பெரும் கேள்வியையும் கேட்டார்.
அது என்ன தெரியுமா?
"எவ்வளவோ புண்ணிய ஸ்தலங்கள் இந்த பூமியில்... எத்தனையோ அருளாளர்களும் இந்த பூமியில்.. சகல பாவங்களையும் போக்கிடும் கங்கையும் பாய்ந்து செல்கிறது. மக்களும் பக்தி உணர்வுடன் வாழ்கிறார்கள். இப்படியிருக்க ஏன் இந்த மண்ணே எப்போதும் அடிமைப்படுத்தப்படுகிறது? ஏன் இந்த மக்களே கஷ்டப்படுகிறார்கள்? இதிகாசங்களும் இறவாப் புகழ் பெற்ற காப்பியங்களும் தோன்றிய இந்த மண்ணின்மீது தெய்வத்துக்கு கருணை இல்லையா... இல்லை பகுத்தறிவாளர்கள் கூறுவதுபோல தெய்வமே ஒரு கற்பனையா?'
என்பதுதான் அவர் கேட்ட கேள்வி. காஞ்சிப் பெரியவரிடம் ஒரு மந்தகாசமான புன்னகை.
எப்பொழுதும் காய்த்த மரமே கல்லடி படும்... அதிலும் இந்த பாரத தேசத்தை ஞானத்துறவி விவேகானந்தர், "இந்த உலகம் என்பது ஒரு வீடானால் அதில் என் பாரத தேசம் ஒரு புனிதமான பூஜையறையைப் போன்றது' என்றார்.
இந்தப் பூஜையறைக்குள் அருள் இருப்பதுபோலவே அதை சரியாகக் கொண்டாடாவிட்டால் இருள் வந்து சேர்ந்துவிடும். இருள் வந்தால்தான் அருள் ஒளியின் தன்மையை உணரமுடியும்.
நிழலருமை வெய்யிலில் அல்லவா தெரியும்?
இப்படிப்பட்ட சிந்தனைகளால் பெரியவர் முகத்தில் மந்தகாசப் புன்னகை தோன்றியதோ என்னவோ? மிகுந்த வருத்தமுடன் கேள்வி கேட்டவருக்கு அவர் வார்த்தைகளில் பதில் கூறவில்லை. அவரிடம், ""உங்களுக்கு "அனுமன் சாலீசா' தெரியுமா?'' என்றுதான் கேட்டார். அவரும் ""கேள்விப்பட்டிருக்கிறேன்'' என்றார்.
""அனுமன் ஒரு மாவீரன்... தோல்வியே காணாதவன். பாரதப் போரில் அர்ஜுனன் தேரில் கொடியாகவும் திகழ்ந்தவன். அவன் இந்த பாரத தேசத்தை நிச்சயம் காப்பாற்றுவான். கவலைப்படாதீர்கள்'' என்ற மகாபெரியவர், தனது சங்கரமட அமைப்பு மூலமும் அன்பர்கள் உதவியோடும் "அனுமன் சாலீசா'வை லட்சக்கணக்கில் அச்சிட்டார்... அச்சிட்டதை போர்முனைக்கு அனுப்பி ஜவான்கள் கையில் கிடைக்கும்படிச் செய்தார்.
"இதை பாராயணம் செய்யுங்கள். புதிய பலம் தோன்றும். செய்யத் தெரியாதவர்கள் இந்தஅனுமனே உடனிருப்பதாகக் கருதி சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள். யுத்த களத்தில் உங்களுக்கு வெற்றியைத் தவிர வேறு எதுவும் ஏற்படாது' என்கிற தகவலையும் அனுப்பினார்.
மகாபெரியவரின் நம்பிக்கை துளிகூட வீண்போகவில்லை. அதன்பின் மிக விரைவாக பாகிஸ்தானை ஓடஓட விரட்டியடித்தது பாரதம்.
அதைத் தொடர்ந்து நடந்த பங்களாதேஷ் யுத்தத்திலும் அனுமன் சாலீசா பல ஜவான்களிடம் பெரும்பங்கு வகித்தது.
இந்த அனுமன் சாலீசாவை லட்சம் முறை பாராயணம் செய்த பலர் இந்த மண்ணில் உண்டு. அவர்களுக்கெல்லாம் அனுமனின் தரிசனமும் பல வடிவத்தில் கிடைத்திருக்கிறது.
அப்படி ஒரு அனுமன் உபாசகர் சென்னைக்கு அருகில் சிங்கப்பெருமாள் கோவில் என்னும் ஊரில் இருந்தார். சாலீசா இவருக்கு தூர திருஷ்டியை வழங்கியது. சென்னையில் ஒரு பெரும் தொழிலதிபர். இன்றும் தொழிற்துறையில் பெரும் சாதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார்.
அவர் தொழில் தொடங்கிய தொடக்க நாட்களில், தொழிலகத்தை விரிவுபடுத்த டெல்லிக்குச் சென்று அதற்கு அனுமதிபெற வேண்டியிருந்தது. ஆனால் டெல்லியில்அனுமதியை அவ்வளவு சுலபத்தில் தரவில்லை. இப்படி இருந்தால் எப்படி தொழில் முனைவது என்று அவருக்குள் ஒரு ஆயாசம். உண்மையில் டெல்லியில் ஒரு அதிகாரிதான் தடையாக இருந்தார். அதற்குப் பல காரணங்களும் இருந்தன.
இந்த நிலையில் இந்தத் தொழிலதிபர் அனுமன் உபாசகரையும் சென்று தரிசித்திருக்கிறார்.
வாயைத் திறந்து தனது பிரச்சினை குறித்து ஒரு வார்த்தைகூட உபாசகரிடம் கூறவில்லை. உபாசகரின் தூரதிருஷ்டியே அவ்வளவையும் அறிந்துகொண்டது. அப்போது அவர் திருஷ்டியில் டெல்லியில் தடையாக இருந்த அதிகாரிக்கு மாற்றல் உத்தரவு வந்து அவர் அந்த சீட்டிலேயே இல்லை என்பதும் தெரிந்தது.
அதை அப்படியே அந்த தொழிலதிபரிடம் கூறினார்.
""உனக்கான தொழில் தடை விலகிவிட்டதே. நாளைக்கே லைசென்ஸ் கிடைக்கும். உன் தொழிலும் அனுமன் அருளால் நன்றாக நடக்கும்'' என்றார். தொழிலதிபர் முதலில் அதை நம்பவில்லை. ஆனால் மறுநாள் நடக்கவும் ஆடிப்போனார்.... உபாசகரின் தூர திருஷ்டியை எண்ணி வியந்ததோடு அனுமனின் கருணையையும் எண்ணி சிலிர்த்துப் போனார்.
அனுமன் உபாசகர்களுக்கு அப்படியொரு சக்தி.
ஒரு உபாசகரின் வாழ்வில் இன்னொரு சிலிர்ப்பூட்டும் சம்பவமும் நடந்தது. சென்னைக்கு அருகில் உள்ள திருநீர்மலைக்கு இவர் தரிசனத்துக்காகச் சென்றபோது ராமஜெயம் அம்மாள் என்னும் ஒரு பெண்மணியும் கோவிலுக்கு வந்திருந்தார்.
உண்மையில் அந்தப் பெண்மணிக்கு வேறு பெயர். ராமபக்தியோடு தினமும் ராமஜெயம் எழுதுவதோடு மற்றவர்களையும் எழுதச் சொல்வார் அந்தப் பெண்மணி. அதனால் அந்தப் பெண்மணிக்கு "ராமஜெயம் அம்மாள்' என்றே பெயர் வந்துவிட்டது.
அந்தப் பெண்மணி தனிமையில் படிகளில் ஏறிக்கொண்டிருந்தபோது மலைப்படிகளிலும் அவ்வளவாக யாருமில்லை. அப்போது அங்கே ஒரு திருடன் அந்தப் பெண்மணியின் கழுத்தைப் பார்த்தான். கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு பவுனில் தடிமனான தாலிச்சங்கிலி அந்த அம்மாளின் கழுத்தில் மின்னுவதைப் பார்த்து விட்டான். அதை அபகரிக்கும் எண்ணத்தோடு மெல்ல அந்த அம்மாவை பின்தொடரத் தொடங்கினான். அதேசமயம் மேலிருந்து உபாசகரும் இறங்கத் தொடங்கியிருந்தார். உபாசகர் வருவதை கவனிக்காமல் அந்தப் பெண்மணியை வேகமாக நெருங்கியவன், சங்கிலியை அறுத்துக்கொண்டு கீழிறங்கி ஓடத் தொடங்கினான். அந்தப் பெண்மணி பதறிட உபாசகரும் திகைத்துப்போய் அனுமனைத்தான் அடுத்த நொடி நினைத்தார்....
Sent from