Bhoo thatha's Blogspot

Search my older Blog

Thursday, September 10, 2015

Digest

பீஜிங் : சீனாவைச் சேர்ந்தவர் யேங். இரவு பணிக்கு சென்ற, இவரது கணவன், நள்ளிரவு, 2:00 மணியளவில் போன் செய்த போது, யேங் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், மறுநாள் காலை, யேங்கின் அலுவலகத்திற்கு வந்து, போனை எடுக்காததற்கான காரணத்தை கேட்டு அடித்தார். அடிதடி சண்டையில், மனைவி யின் மூக்கை கடித்து, விழுங்கிவிட்டார். சம்பவத்தை கண்ட சக ஊழியர்கள், யேங்கை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அறுவை சிகிச்சை மூலம் சரி செய்வதற்கு மூன்று மாதமாகும் என்றனர்.
---------
அக்பர் சக்கரவர்த்தி ஒருநாள் தம்மைப் பற்றி மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிந்துகொள்ள விரும்பினார். இதைப்பற்றி பீர்பலிடம் கூறினார்.
அதற்கு பீர்பல், "மாறு வேடமணிந்து சென்றால் மக்கள் உங்களைப் பற்றியும், உங்கள் ஆட்சியைப் பற்றியும் என்ன நினைக்கின்றனர் என்று தெரிந்துகொள்ளலாம்,'' என்று கூறினார்.

சக்கரவர்த்தியும், பீர்பல் கூறிய யோசனைப்படி பீர்பலுடன் மாறுவேடம் அணிந்து நகருக்குள் சென்றார்.

இருவரும் மாறு வேடத்தில் இருந்ததால் ஒருவராலும் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

அப்போது கடும் வெயில். ஒரு விறகு வெட்டி சுமக்க முடியாத அளவுக்கு பாரத்தை சுமந்தவாறு வந்தான். அவனைப் பார்த்ததும் சக்கரவர்த்திக்கு இரக்கம் ஏற்பட்டது.

"ஐயோ பாவம், சாண் வயிற்றுக்காக இந்தக் கடும் வெயிலில் இவ்வாறு துன்பப்படுகிறானே!' என்று நினைத்தார்.

அவன் அருகே வந்ததும், "ஐயா பெரியவரே, சுமையை இறக்கி வைத்து விட்டு, சற்று இளைப்பாறிக் கொள்ளுங்கள்,'' என்றார் அக்பர்.

"இறக்கி வைப்பதற்கு ஆள் கிடைக்காததால்தான் இடுப்பொடிய சுமந்து செல்கிறேன்,'' என்றான் விறகுவெட்டி.

"நான் கை கொடுக்கிறேன். சுமையை இறக்கி விட்டு சிறிது நேரம் இளைப்பாறுங்கள்,'' என்று கூறிய அக்பர், விறகு வெட்டி தலைச்சுமையை இறக்குவதற்கு உதவி செய்தார்.

சுமையை இறக்கி வைத்து விட்டு இளைப்பாறிய விறகு வெட்டியிடம், பீர்பல் மெல்ல பேச்சுக் கொடுத்தார்.

"ஐயா, பெரியவரே! நமது சக்கரவர்த்தி இறந்து விட்டாரே, உமக்குச் சேதி தெரியுமா?'' என்றார்.

இதைக் கேட்டதும் விறகு வெட்டி, "ஐயோ! நமது சக்கரவர்த்தி இறந்து விட்டாரா? ஏழைகளுக்கு உதவி செய்யும் உத்தமப்பிரபுவாயிற்றே! அப்படிப்பட்ட நல்ல மனிதரையா எமன் வாயில் போட்டுக் கொண்டான்?'' என்று கதறிக் கண்ணீர் வடித்தான்.

"என்ன செய்வது? என்றாவது ஒருநாள் அனைவரும் இறக்க வேண்டியதுதானே!'' என்று விறகு வெட்டியிடம் கூறினார் பீர்பல்.

"என்னைப் போன்ற பிறவிகள் வாழ்வதால் உலகத்துக்கு என்ன பிரயோசனம்? நம் அரசரைப் போன்றவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தால் மக்களுக்கு எவ்வளவோ நன்மைகள் கிடைக்கும். இனி யார் ஆட்சிக்கு வருவார்களோ? எப்படி பரிபாலனம் நடக்குமோ! கடவுள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்,'' என்று விறகுவெட்டி மீண்டும் சுமையை எடுத்து தலைமேல் வைத்தபடி செல்லலானான்.

"என்ன பீர்பல், உயிருடன் இருக்கும் போதே நான் இறந்து விட்டதாகக் கூறி விட்டாயே! இது என்ன விளையாட்டு?'' என்றார் அக்பர்.

"அப்படிக் கூறியதால்தானே உங்களைப் பற்றி அந்த விறகுவெட்டி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பது தெரியவந்தது,'' என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, தயிர் விற்கும் பெண்ணொருத்தி தலைமேல் தயிர் பானையுடன் வந்து கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்த அக்பர், "என்ன இப்படி நடந்து செல்கிறாளே! கொஞ்சமாவது அடக்க, ஒடுக்கம் இருக்க வேண்டாமோ! கொஞ்சம் கூட மரியாதை தெரியாதவளாயிருக்கிறாளே!'' என்று கேலியாகக் கூறினார் அக்பர்.

அவள் நெருங்கி வந்ததும் பீர்பல் அவளிடம், "நமது சக்கரவர்த்தி இறந்து விட்டாராமே... உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்.

"இறந்து போனால் என்ன குடியா முழுகிப் போய்விட்டது? எல்லாரும் ஒருநாள் சாக வேண்டியது தானே!'' என்றாள் அந்தப் பெண்.

"அவர் இறந்துவிட்டால் அரசாட்சி எப்படி நடக்குமோ! யார் பட்டத்துக்கு வருவார்களோ?'' என்றார் பீர்பல்.

"இவருடைய தகப்பனார் செத்தார். இவர் பட்டத்துக்கு வந்தார். இவர் செத்தால் இவருடைய மகன் பட்டத்திற்கு வருவான். இந்த ஆக்ராவில் எத்தனையோ அரசர்கள் ஆட்சி புரிந்து மறைந்து விட்டார்கள். இவர்கள் எம்மாத்திரம்?'' என்றாள்.

"அப்படியானால் சக்கரவர்த்தி இறந்து விட்டதற்காக நீ மகிழ்ச்சியா கொள்கிறாய்?'' என்றார் பீர்பல்.

"ஆமாம். பேரரசர் இறந்துவிட்டால் அவரது ஈமச் சடங்குகள் விமரிசையாக நடக்கும். நிறையப் பேர் வெளி நாடுகளிலிருந்தெல்லாம் வருவர். தயிர், பால், வெண்ணெய், நெய் முதலியவை ஏராளமாகச் செலவாகும். அதனால் எங்களுக்கு நிறைய வருமானம் கிடைக்கும்,'' என்று கூறிவிட்டுச் சென்றாள்.

இதைக் கேட்டதும் அக்பருக்கு அந்தப் பெண்ணின் மேல் மிகுந்த கோபம் ஏற்பட்டது. அதனைக் கண்ட பீர்பல், "அரசே, முதலில் வந்த விறகுவெட்டியிடம் அன்பாக நடந்து கொண்டீர்கள். அதற்குத் தக்கவாறு உங்கள் மனம் மகிழத்தக்க வகையில் பதில் கிடைத்தது. இந்தப் பெண்ணை கேலி பேசினீர்கள். அதற்குத் தகுந்தவாறு தான் பதிலும் இருக்கும்.

இதற்காக ஆத்திரப்பட்டு பயன் இல்லை. மேலும், எல்லாரும் ஒரே மாதிரியாக நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்பதும் புத்திசாலித்தனம் அல்ல. அவரவர் மனப் போக்குக்குத் தக்கவகையில் தான் எண்ணங்களும் இருக்கும். அந்தப் பெண்ணுக்கு பேரரசரை விட தனக்கு நடைபெறப்போகும் வியாபாரத்தில் தான் அதிக அக்கறை. எனவே, அவளுக்கு யார் இருந்தால் என்ன? யார் மாண்டால் என்ன? இதையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது,'' என்று கூறினார் பீர்பல்.

பீர்பல் சொல்வதும் சரிதான் என்று எண்ணிய அக்பர், அத்துடன் தங்கள் நகர் சோதனையை முடித்துவிட்டு அரண்மனைக்குத் திரும்பினார்.
---------
                             image1.jpeg

பிள்ளையாருக்கு பர்த் டே இந்த 17 அன்று. குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த கடவுள் இந்த பிள்ளையாரப்பாதான்!



தமிழ்நாட்டின் முதல் பிள்ளையார்!

விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் பரவியதே கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் தான். சாணக்கிய மன்னன், இரண்டாம் புலிகேசியுடன் போர் புரிந்து வெற்றி பெற்ற பிறகு, நரசிம்ம பல்லவருடைய தளபதி பரஞ்சோதி (சிறுத்தொண்ட நாயனார்) வாதாபியில் இருந்து எடுத்து வந்த பிள்ளையார் தான் தமிழ் நாட்டிற்கு முதலில் வந்த பிள்ளையார்.

மன்னர் நரசிம்ம பல்லவரோ, ஒரு அற்புதமான குடைவரைக் கோயில் ஏற்படுத்தி, இந்தப் பிள்ளையாரை அங்கு குடி வைத்தார். அந்த இடம்தான் பிள்ளையார்பட்டி. 

பாசம், அங்குசம் இல்லாமல் இரண்டே இரண்டு கைகளுடன் வலக்கையில் லிங்கத்துடன் வலம் புரி துதிக்கை சகிதமாக வித்தியாசமான கோலத்தில் இந்தப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.



உருவமேன்மை!

பிள்ளையாரை பார்க்க, பார்க்க அல்ல, பார்த்த உடனே பிடிக்கும்.

அவரின் தோற்றமே அதற்கு காரணம். வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு, விநாயகரின் திருமேனியில் இருக்கிறது. விநாயகரின் கால்களும், வயிறும் பூதத்தின் உறுப்புகள், மார்பும், கைகளும், தேவர்களுக்கு உரியது.

நெற்றியும், புருவங்களும், சடைமுடியும் மனிதருக்கு உரிய உறுப்புகள் ஆகும். எனவே, மேற்சொன்ன அனைவரது ஆற்றல்களும் ஒருங்கே பெற்ற பேராற்றல் வாய்ந்தவர்.

வேடிக்கையும், வினோதமும் நிறைந்த இவரது தொப்பை அழகானது. வேறு எந்த தெய்வங்களுக்கும் இல்லாதது. சடைமுடியுடன், ஞான வடிவத்துடன் சற்றே குறும்புத்தனம் கலந்து சிரிக்கும் குழந்தையின் கண்கள். சில திருமேனிகளில் பக்தர்களின் தீவினைகளை எரித்து, அஞ்ஞான இருளகற்றும் பேரொளி கொண்ட நெற்றிக்கண்.

வலமாகவோ, இடமாகவோ சுழித்த அல்லது நேராக நீண்ட துதிக்கை, உயிர்களுக்கு கவசம் போன்ற திருக்காதுகள் என்று அழகு சொட்டச் சொட்ட நிற்பார் விநாயகர் பெருமான்.



அவ்வை அகவல்!

விநாயகர் பற்றி எத்தனையோ பாடல்கள், நூல்கள் இருக்கின்றன. அவற்றில் எல்லாம் மிக பிரசித்தி பெற்றது நமது அவ்வையார் எழுதிய, 'விநாயகர் அகவல்' தான். இன்றும் கோடான கோடி பக்தர்களால், 'விநாயகர் சதுர்த்தி' அன்று பாராயணம் செய்யப்படுகிறது.



வித்தியாசமான விருந்து!

குதூகலமான தெய்வத்திற்கும், அவரை தொழும் குழந்தைகளுக்கும் ஒரு புதுமையான கொழுக்கட்டை.

இது 1 பிரட் கொழுக்கட்டை செய்முறை நேரம்:

தேவையானவை: மில்க் பிரட் - 1 பாக்கெட், தேங்காய்த் துருவல் - 1 கப், வெல்லம் - 100 கிராம், ஏலக்காய் -5, நெய்-1ஸ்பூன், வெண்ணெய்-1 கரண்டி.

செய்முறை: பிரட்டை சுற்றியுள்ள சிவந்த பகுதியை நீக்கி விட்டு பிரட் துண்டுகளை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

1 ஸ்பூன் நெய்யில் வெல்லம், பொடித்த ஏலக்காய் தூள், தேங்காய்த் துருவலைக் கிளறி வைத்துக் கொள்ள வேண்டும். தேவையானால், சிறிதளவு நீர் சேர்த்து கிளறலாம். பின் பிரட் ஸ்லைசை நீரில் நனைத்து பிழிந்து ஒவ்வொரு ஸ்லைசிலும் ஒரு ஸ்பூன் பூரணத்தை நடுவில் வைத்து அழுத்தி மூட வேண்டும். விரிசல் இல்லாமல் அழுத்தி மூட வேண்டும். பூரணம் வைத்த பிரட் ஸ்லைசை ஆவியில் வேக வைத்து எடுத்து அதன் மீது சுடச்சுட வெண்ணெயை தடவி ஒன்றின் மீது ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக வைத்து ஆற விட வேண்டும். சுவையான பிரட் கொழுக்கட்டை இப்போது தயார்!

No comments: