Bhoo thatha's Blogspot

Search my older Blog

Sunday, August 30, 2015

Hanumaan


1
உலக உயிரினங்களில் மேலான சக்தி படைத்த ஒரே உயிரினம் மனித இனம் மட்டுமே! அதனால்தான் அளவில் பெரிய யானையைக்கூட மனிதனால் ஆட்டிவைக்க முடிகிறது. சீறிப் பாய்ந்துவரும் ஆற்றின் குறுக்கே அணை கட்டி, பஞ்சபூதங்களில் ஒரு பூதமான நீரையே அடக்கி ஆளவும் முடிகிறது.
மனிதனின் வல்லமையை இதுபோல் பட்டியல் போடத் தொடங்கினால் அது நீண்டபடியே இருக்கும். என்னதான் மனிதன் பெரும் வல்லாளனாக இந்தப் பூவுலகில் திகழ்ந்தபோதிலும் அவனால் மரணத்தை வெல்லமுடியவில்லை. அதேபோல் நரை, திரை, மூப்பிடமும் அவனால் எதுவும் செய்ய முடிவதில்லை.
அதுமட்டுமா?
அவனால் பல விருப்பங்களைத் தெரிவிக்க முடிகிறது- ஆனால் அனைத்தையும் ஈடேற்றிக்கொள்ள முடிவதில்லை. ஒன்று கிடைத்தால் ஒன்று இல்லை என்றாகிறது. கூர்ந்து கவனித்தால் அவன் வாழ்வு முழுக்க இன்பம் மட்டுமே வாழ்வாக இருந்ததில்லை. துன்பமும் கூடவே வந்து, "இரண்டும் கலந்ததே வாழ்க்கை' என்கிறது.
மொத்தத்தில் கூட்டிக்கழித்து வகுத்துப் பெருக்கினால், எதுவும் நிலையில்லை என்பது முதல் எதையும் எவரும் எடுத்துச்செல்ல முடியாது என்பது வரைதான், மேலான ஒப்பற்ற உயிரினத்தின் வாழ்க்கைப்பாடு அமைந்துள்ளது.
இதனால் ஏன் இப்படி? எதனால் இப்படி என்கிற கேள்விகள் முளைவிட, அவனும் தன் ஆறாவது அறிவாலே, தான் வாழ்வதற்காக வழிவகை செய்துகொள்வதற்கு நடுவில் ஒரு ஞானவேள்வியும் செய்ததில் பல சத்தியங்கள் புலனாகின்றன. அந்த சத்தியங்களின் ஒட்டுமொத்தமாக- தன்னைப் படைத்தது முதல் உலகைப் படைத்து அதில் பல்லாயிரம் உயிரினங்களை- தாவரங்களைப் படைத்து, பஞ்ச பூதங்களைப் படைத்தது வரை மேலான ஒரு சக்தி இருந்தாக வேண்டும் என்கிற பேருண்மையை நெருங்குகிறான்.
அந்த சக்திக்கு அவன் சூட்டிய பெயர்தான் கடவுள்! இந்தக் கடவுளை அவன் தன் புலனடக்கத்தால் தரிசனம் செய்து, புவனம் கடந்த பல பேருண்மைகளையும் அறிந்து, அதை அவன் உலகிற்குச் சொல்லும்போது அது ஆன்மிகப் பாடமாக, வேதங்களாக விளங்குகிறது.
இந்த ஆன்மிகமும் வேதமும் மானிடனை மகத்தானவனாக்கி- பிறப்பற்றவனாக்கி நித்திய இன்பத்தில் நிலைக்க வைக்கிறது. ஆனாலும் இந்த மகத்தான நிலையைஅடைவது எளிதல்ல!
கோடியில் ஒருவருக்கே அது வாய்க்கிறது.
அப்படி வாய்க்கப்பெற்ற ஒரு அற்புதமே அனுமன்! இத்தனைக்கும் அனுமன் மனிதாம்சத்தோடு விலங்கின் தன்மையும் கொண்ட ஒரு விசித்திரன்!
இந்த விசித்திரன் மானுட பக்திக்கு எளிதாக அகப்படும் ஒரு ஆச்சரியனும் கூட! இவனுடைய வரலாற்றை இதுகாறும் வாசித்ததில் இந்தப் பேருண்மையை நாம் உணர்ந்திருப்போம்.
வானர இனத்தில் பிறந்து, மானுட குணத்தில் வளர்ந்து, தேவதன்மையை அடைந்து, மனித இனத்துக்கு பெரும் உதாரணபுருஷனாக விளங்குகின்றவன் மாருதி என்கிற இந்தஅனுமன்!
எது சக்தி என்பதற்கு உதாரணம் இவன்.
எது பக்தி என்பதற்கும் உதாரணம் இவனே!
பெரும் சகாயன், இணையில்லாத நண்பன், உத்தமகுரு என்று எல்லா நிலைப்பாடும் இவனுக்குப் பொருந்தும்.
நால்வகை யுகங்களில் ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு தன்மை உண்டு. இப்போது நடக்கும் கலியுகத்துக்கு வினோதமான பல தன்மைகள் உண்டு. அதில் ஒன்று தர்மம் நசிவதும் அதர்மம் வளர்வதுமாகும். அதுமட்டுமல்ல; கலியுகத்தில் எதுவானாலும் கண்ணுக்கு முன்னே! விதைப்பது எதுவோ அதையே அறுப்பவராகவும் இருப்போம்.
இந்த யுகத்தில் மானிடப் பிறப்பெடுத்து, பிறப்பை அழகாக முடித்துக் கொள்வதுஅவ்வளவு சுலபமான விஷயமல்ல. இந்த உலகை தற்போது பெரும் மாயை சூழ்ந்துள்ளது. அது நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் காட்டவல்லது. தர்மத்துக்கு பெரும் சோதனைகள் சர்வசாதாரணமாக ஏற்படும். இறுதியில் தர்மமே வெல்லும். ஆனபோதிலும் இறுதிவரை பொறுமையாக இருக்கமுடியாதபடி வினைகள் ஆட்டிவைக்கப் பார்க்கும். பெரும் மனோதிடம் இருந்தாலன்றி மானிடப் பிறப்பை நல்லவிதமாக ஆக்க இயலாது.
இப்படி ஒரு காலகட்டம் வரும்; அப்போது மனித இனம் அல்லல்படும்போது அதை மீட்டெடுக்க நாம் ஏதாவது செய்தாகவேண்டும் என்று, வானரப் பிறப்பெடுத்து ராமபக்தனாகத் திகழ்ந்த அந்த நாளிலேயே அனுமன் முடிவு செய்துவிட்டான். அதனாலேயே "உனக்கு என்ன வேண்டும்?' என்று ராமன் கேட்டபோது இறவா வரத்தையோ- இல்லை பிறவா வரத்தையோ- அதுவுமில்லை மோட்ச கதியையோ அனுமன் கேட்கவில்லை.
"ப்ரபோ! உன் பக்தனாக உன் நாமத்தைச் சொல்லிக்கொண்டு யுகம் கடந்தும் நான் சஞ்சரிக்கும் வல்லமை ஒன்றே போதும்' என்று கேட்டான்.
அதாவது "ராமராம' என்று நாமம் சொல்லிக்கொண்டு பெரும் பக்தனாக எந்த நாளும் திகழும் ஒரு வரத்தைக் கேட்டவன் அனுமன்.
நாம் நம்முன் கடவுள் தோன்றினால் இப்படியா கேட்போம். எவ்வளவோ பேர்முன் கடவுள் தோன்றத்தான் செய்திருக்கிறார்.
எவருமே அனுமன்போல் ஒரு வரத்தைக் கேட்டதே இல்லையே...?
என்றால் அனுமன் எத்தனை பெரியவன்?
எவ்வளவு கருணை மிக்கவன்?
நம் அறிவால் ஓரளவுக்குத்தான் அனுமன் குணத்தை வியக்க இயலும். அவன் அளவுகள் கடந்தவன். அப்படிப் பெற்ற வரம் காரணமாக, இன்றும் அவன் தன்னை வேண்டுவோர்க்கு வழிகாட்டி பெரும் துணையாகவும் இருக்கிறான்.
பரந்த இந்த உலகில் அவனுக்கு மிகப் பிடித்தமான இடம் இமயமலைச் சாரல்! அங்கேஅவனது ராமநாம வேள்வி இன்றும் தொடர்ந்தபடியே உள்ளது. அதேசமயம் அவனது ஸ்தூலம் கடந்த ஒளியுடல் ஒன்றுக்குப் பலவாகி, பக்தர்கள் அழைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று அவர்களுக்கு கை கொடுத்து உதவியபடி இருக்கிறது.
பாரத தேசம் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க அவனுக்கான ஆலயங்கள் எழுப்பப்பட் டுள்ளன. இதில் மிக அதிகமான ஆலயங்கள் இருப்பது நம் பாரத தேசத்தில் கர்நாடகம், பின் மகாராஷ்டிரம், அதன்பின் ஆந்திரம், இறுதியாகத்தான் தமிழகம்!
இவனது ரூபமே இவனது குணத்தைச் சொல்லிவிடும். தலைக்குமேல் வால் வளைந்து நிற்க, அதில் மணி இருந்தால், இவன் கேட்ட வரத்தை நம்மை பரிகாரம் செய்யவைத்து வழங்குபவன்.
கையில் சஞ்ஜீவி பர்வதத்துடன் இவன் இருந்தால், கடமை உணர்வோடு இருப்பவன். இவனது இந்த தோற்ற தரிசனம் நோயை நீக்கும்.
கைகூப்பி வணங்கியபடி இவன் இருந்தால், இவன் காதில் நாம் சொல்வது எல்லாமும் ஈடேறும். இவன் அதை மேலே சொல்லி நிறைவேற்றித் தருபவன்.
நிஷ்டையில் இருந்தால் மனஅமைதி தருபவன்.
தாவக் காத்திருந்தால் நண்பனாக- குருவாக- துணைவரத் தயாராக இருப்பதாகப் பொருள்.
இப்படி இவன் ரூபத்துக்குப் பின்னாலேயே பல பொருளுண்டு. இப்படி எல்லாவித ரூபங்களோடு விஸ்வரூபியாகவும் இவன் பல இடங்களில காட்சி தருகிறான்.  அந்த தரிசனம் நம் மனதின் பயத்தைப் போக்கி, உலகில் உண்மையில் எது பெரிதோ அதை நமக்கு உணர்த்தும். விஸ்வரூப தரிசனம் செய்யச் செய்ய மலிவானவை மனதைவிட்டுத் தானாக வெளியேறிவிடும்.
இவனுக்கு பழங்கள் என்றால் மிகப் பிரியம். அதேபோல் வடை, வெண்ணெயும் மிகப் பிடிக்கும். உண்ண எவ்வளவோ பதார்த்தங்கள் இருக்க, இம்மூன்றை இவனுக்கு பெரிதாக நிவேதனம் செய்வதன் பின்னணியில் ஆழ்ந்த பொருள் உள்ளது.
தென்னிந்தியாவில்தான் வடைமாலை பிரசித்தி... வடஇந்தியாவில் இனிப்பாலான ஜாங்கிரியைதான் பெரிதும் பிரசாதமாகப் படைப்பார்கள். எல்லாவற்றிலுமே நுட்பமான பல உள்விஷயங்கள் ஒளிந்துள்ளன.
முதலில் பழத்தைப் பார்ப்போம்.
உணவுப் பொருட்களிலேயே உன்னதமானது
பழம் என்பதற்கு ஒரே காரணம்தான். பூ பிஞ்சாகி, பிஞ்சு காயாகி, காய்தான் கனியாகிறது.
நால்வகை நிலைப்பாடு... இந்தக் கனியாதல் என்பதன் பின்னே பழுத்தல் என்பது உள்ளது. அதாவது காலத்தால் பழுத்தல். பழுத்தபின் பழம் மரத்தில் தங்காது. உதிர்ந்து விழுந்துவிடும். அப்படி உதிரும்போது பால்வடியாது.
அதாவது மரத்தைப் பிரியும் துக்கத்தை மரமோ அல்லது பழமோ காட்டாது.
அது ஒரு சந்தோஷப் பிரிவு!
இந்தக் கனிந்த நிலையை சமைந்த நிலை எனலாம். அதாவது அடுப்பு, பாத்திரம், நெருப்புஎன்று முயன்று நாம் சமைக்கத் தேவையின்றி இயற்கையே சமைக்கும்போது அதைப் பழுத்தல் என்கிறோம். அப்படி பழுக்கின்ற பழங்களும் உடம்புக்கு மிக உகந்தவையாக- எல்லா சக்தியும் உடையதாக- சத்வ குணத்தை அளிப்பதாக இருப்பதால், முனிவர்களின் முக்கிய உணவாக பழமே விளங்கியது. எனவேதான் இறை பிரசாதமாகவும் இது முதலிடம் பெறுகிறது. அனுமனோ விலங்கினத்துக்கும் பிரதிநிதி. அதிலும் பழங்களையே பிரதான உணவாகக் கொண்ட குரங்கு இனத்தவன். எனவே பழம் பெரும் பிரசாதம் இவனுக்கு.
அடுத்து வடை! வடையின் பிரதான தானியம் உளுந்து. உளுந்து கோள்களில் ராகுவை உடையது. ராகு- கேது எனும் இரு உபகிரகங்களும் அசுர வழி வந்து, அமுதம் திருடப்போய் தலையை இழந்து பாம்பின் தலையைப் பெற்றதெல்லாம் புராண வரலாறாகும்.
இந்த இரு கோள்களும் மானிட வாழ்வை தங்கள் தசைகளில்- புக்திகளில்- அந்தரங்களில் ஆட்டி வைப்பவர்கள். இவர்களை நாம் இணக்கமாக அடைய, இவர்களின் அம்சம் சார்ந்ததை அனுமனுக்குப் படையலிடும்போது, அவன் தன் மேலான சக்தியால் இவர்களின் பாதிப்புகளைத் தான் ஏற்று நம்மை ரட்சிக்கிறான்.
இந்த உளுந்தைப் பயன்படுத்தியே ஜாங்கிரி செய்யப்படுகிறது. எனவே உளுந்துதான் இதில் பிரதானம்.
அடுத்து வெண்ணெய்.
வெண்ணெய் கண்ணனுக்கும் பிரியமான உணவு.
விஞ்ஞானம் இதை கொழுப்பாகப் பார்க்கிறது.
மெய்ஞ்ஞானமோ இதை பெரும் தத்துவப் புதையலாகப் பார்க்கிறது.
பசுவின் பால் காய்ச்சப்பட்டு, பின் தயிராக்கப் பட்டு, அந்த தயிரும் கடையப்பட்டு அதனுள் இருந்தே மோரை விலக்கி வெண்ணெய் பிரிந்து வருகிறது. மோரோடும் தயிரோடும் இருந்தவரை ஒட்டி இருந்தது- பிரியவும் நீர்மேல் மிதக்கிறது. உருக்கினால் மணம் மிக்க நெய்யாகி வேள்விக்குப் பயன்பட்டு புனிதத் தீயாகி வானேகி மறைகிறது.
மனித வாழ்வும் இன்ப துன்பங்களால் கடையப்படுகிறது. அதன் காரணமாக  விளைந்த ஞானம் உலக பந்தத்தை நிலையற்றதாகக் கருதி, உலகோடு இருந்தாலும் அதோடு ஒட்டி விடாதபடி தனித்து நிற்க வழிசெய்கிறது. பின் பக்தியின் உருக்கத்தில் நெய் போலாகி, பின் தீயாகி விண்ணேகுகிறோம்.
வெண்ணெய்க்குப் பின்னால் இப்படி ஒரு நுட்பச் செறிவு இருப்பதால்தான் பிரசாதத் தில் வெண்ணெய்க்கு பிரதான இடம். பற்றற்ற வெண்ணெய் அனுமன் நெஞ்சை அடையும்போது, அவனது இதயத்தில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் ராமநாம அதிர்வுகளுடன் கலந்து பெரும் பிரசாதமாகிவிடுகிறது. எனவேதான் அனுமனுக்கு வெண்ணெய்க் காப்பும் இடப்படுகிறது.
இதுபோக வெற்றிலை மாலையும்
அனுமனுக்கு மிக விசேஷமானது. அதேபோல செந்தூரமும் மிகப் பிரியம். பல இடங்களில் செந்தூர ஆஞ்சநேயனைக் காணலாம். செந்தூரம் அவனுக்கு ஏன் பிடிக்கும் என்பதன் பின்னே ரசமான சம்பவம் ஒன்றுண்டு. இந்தச் சம்பவத்துக்கும் சீதாபிராட்டிக்கும்கூட தொடர்புண்டு. அந்த சம்பவத் தொடர்புக்குரிய விஷயங்களை மட்டுமல்ல; இந்த யுகத்தில் அனுமன் பல ஞானியர்க்கு தரிசனமளித்து, அவர்களுக்கு ராம தரிசனம் கிடைக்கவும் வழிகாட்டியுள்ளான்.
இந்து சாம்ராஜ்ஜியம் கண்ட வீரசிவாஜி, அவரது குருவான ராமதாசரால் அனுமனின் திவ்ய தரிசனத்தைக் கண்டவராவர்.
அதேபோல கபீர்தாசர் தொடங்கி, சமர்த்த ராமதாசர், பத்ராசல ராமதாசர் என்று அனுமனை  நேரில் தரிசித்தவர்கள் பலப்பலர். அதுமட்டுமா... பெரும் மகானான ராகவேந்திரரும் அனுமனின் பேரருளால் இன்புற்றுத் திளைத்தவர். அனுமன் உபாசனா மூர்த்தி. அவன் எப்படி "ராம ராம' என்று ஜெபித்தபடி பெரும் உபாசகனாக இருக்கிறானோ அதேபோல அவனை உபாசிப்பவர்களுக்கு அவன் இஷ்ட தெய்வமாகி, அவர்களுக்கும் ராம தரிசனம் கிடைக்கச் செய்து பிறவித்தளையை விடுவிக்கிறான்.
பெரும் ஞானிகளுக்கு மட்டுமா அவன் வழிகாட்டி? பிஞ்சுப் பிள்ளைகளுக்கும்தான். இவனது மந்திரங்களில் "சாலீசா' மிக பவித்ரமானது. அனுமன் சாலீசா சொல்லும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி பெருகி எதிலும் வெல்லும் ஆற்றல் ஏற்படும். அனுமனின் பல உபாசனா மந்திரங்கள் அவனை கட்டி இழுத்து வீட்டுக்கே அழைத்து வந்துவிடும். அப்படி அவன் எதிர்வந்து, "அழைத்தீர்களா?' என்று கதையும் கையுமாக நின்று கேட்கும்போது மேனி சிலிர்த்துப் போகும்! அதெல்லாம்தான் அனுமன் மகிமை. வரும் பதிவுகளில் அந்த மகிமைகளை வரிசையாக அறிவோம்!
Courtesy:bala hanumaan

No comments: