Bhoo thatha's Blogspot

Search my older Blog

Wednesday, January 27, 2016

Health related issues

அறிவோம்

சாப்பிடும் முன் தண்ணீர் குடிக்கலமா ?


ஒரு கவளம் சோறு... ஒரு மடக்கு தண்ணீர்... ஒவ்வொரு வாய் சாப்பாட்டுக்கு முன்பும் பின்பும் தண்ணீர் இருந்தால்தான் உணவே உள்ளே இறங்கும் பலருக்கும். சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது போன்ற பெரியவர்களின் எச்சரிக்கைகள் எந்த அளவு சரியானவை? விவரிக்கிறார் குடல்நோய் அறுவை சிகிச்சை நிபுணர்  டாக்டர் ஜோதிபாசு!

‘‘பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் தண்ணீர் குடித்துவிட்டு சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். சாப்பாட்டுக்கு முன் கண்டிப்பாக தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவ ரீதியாக எந்தக் கட்டாயமும் கிடையாது. தண்ணீர் அத்தியாவசியம் என்பதால், அது பற்றி பலவிதமான கருத்துகள் நிலவுகின்றன. சிலர், உண்பதற்கு முன்பு தண்ணீர் அருந்தும்போது குடல் விரிவடையும் என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர் வரை தேவைக்கு அதிகமாக  சாப்பிடுவார்கள் என்று கூறுகின்றனர். மாறாக, சிலர் தண்ணீர் குடிப்பதால் உண்ணும் உணவின் அளவு குறைந்துவிடும் என்கின்றனர். அதிலும் குறிப்பாக, குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால், அவர்கள் வழக்கமாக சாப்பிடும் அளவு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என்கின்றனர். 

சாப்பாட்டுக்கு இடையே தண்ணீர் குடிப்பது தொடர்பாக சில கட்டுப்பாடுகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டியது அவசியம். சப்பாத்தி, ரொட்டி போன்ற எளிதில் கரையாத உணவுப் பொருட்கள் தொண்டையில், உணவுக்குழாயில் அடைத்துக் கொள்ளும். அது மாதிரியான நேரங்களில் சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம். எந்த காரணத்திற்காகவும் வாயில் உணவை  வைத்துக்கொண்டே   தண்ணீர் குடிக்கக்கூடாது. அப்படி செய்வதால் புரையேறும். சாப்பிடும்போது இடையே தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், சுத்தமான பாத்திரத்தில் நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்த அல்லது மிதமான சூட்டில் தண்ணீர் குடிக்கலாம்.

திரவம் என்ற அடிப்படையில், தண்ணீருக்குப் பதிலாக ஜூஸ் குடிப்பதில் எந்த தவறும் இல்லை. ஜூஸில் கலோரி மற்றும் சர்க்கரையின் அளவு அதிகம் என்பதால் பருமனான உடல் கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஜூஸை தவிர்ப்பது நல்லது. 60  முதல் 70 கிலோ எடை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நாம் வெளிவிடும் மூச்சுக் காற்று மூலமாக அரை லிட்டர் அளவு நீர் வெளியேறும். 

உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், வியர்வை ஏராளமாக வெளியேறும் உடல்வாகு கொண்டவர்கள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 2 லிட்டருக்கும் அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லது. இதயம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் டாக்டர் அறிவுறுத்திய அளவுக்குத்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். மருத்துவர் கூறும் அளவையே தவறாமல் பின்பற்ற வேண்டும். இவர்கள் தாகம், நாவறட்சி, சாப்பிட்ட பின் அதிக அளவு நீர் குடிக்க வேண்டும் என்ற உணர்வு போன்றவற்றை காரணம் கூறி, அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதைத்  தவிர்க்க வேண்டும்.’’ 

"சப்பாத்தி, ரொட்டி போன்ற எளிதில் கரையாத உணவுப் பொருட்கள் தொண்டையில், உணவுக்குழாயில் அடைத்துக் கொள்ளும். அது மாதிரியான நேரங்களில் சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம். வாயில் உணவை வைத்துக்கொண்டே தண்ணீர் குடிப்பது மிகவும் தவறான செயலாகும். அப்படி செய்வதால் புரையேறும்..."
-----------------------------------
கூந்தல் 

சரியான ஷாம்புவை தேர்வு செய்வது எப்படி?

தினமும் பல் துலக்குகிறோம். முகம் கழுவுகிறோம். குளிக்கிறோம். அது போலத்தான் கூந்தலை சுத்தப்படுத்துவதும் அன்றாடம் செய்யப்பட வேண்டிய அவசியமான கடமை. ஆனால், பலரும் கூந்தலை சுத்தப்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. தினமும் தலைக்குக் குளிப்பதா என்கிற கேள்வி அனேகம் பேருக்கு உண்டு.
- ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

கூந்தலில் சீபம் என்கிற ஒருவகையான இயற்கை எண்ணெய் சுரக்கும்ஷாம்பு என்பது மண்டைப் பகுதியில் படிகிற தூசு, அழுக்கு, அதிகப்படியான எண்ணெய் பசை போன்றவற்றை நீக்கி, கூந்தலை சுத்தப்படுத்துகிற ஒரு வழுவழுப்புத்  திரவம். ஆனால், ஒவ்வொரு
வரும் அவரவர் கூந்தலின் தன்மைக்கேற்ற ஷாம்புவை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். உங்களுடைய கூந்தல் எந்த வகையைச் சேர்ந்தது எனத் தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம். மண்டைப்பகுதி எண்ணெய் பசையுடன் இருக்கிறது. ஆனால், நுனிகள் வறண்டிருக்கின்றன... அப்போது என்ன ஷாம்பு உபயோகிப்பது? வறண்ட கூந்தலுக்கானதையா? எண்ணெய் பசைக் கூந்தலுக்கானதையா? இப்படி ஒவ்வொருவருக்கு ஒரு கேள்வி இருக்கும். தவிர, கூந்தலின் ஈரப்பதம் காக்க... அடர்த்தியாகக் காட்ட... மிருதுவாக்க... பலப்படுத்த... இப்படி ஏதேதோ உத்தரவாதங்களுடன் நிறைய ஷாம்புகள் வருகின்றனவே... எதைத் தேர்வு செய்வது என்கிற கேள்வியும் இருக்கும்.

* எண்ணெய் பசை கூந்தலுக்கு...

- மண்டைப்பகுதியில் இயற்கையாகக் காணப்படுகிற எண்ணெய் பசையானது மண்டைக்கு ஒருவிதப் பாதுகாப்பைத் தரக்கூடியது. அதாவது, மண்டைப்பகுதி சீக்கிரமே வறண்டு போகாமலிருக்க ஈரப்பதத்தைத் தக்க வைக்க அது உதவும். ஆனால், அதுவே அளவுக்கதிகமாக சுரந்தால் கூந்தல் பிசுபிசுப்படைவதுடன், பொடுகு உருவாகவும் காரணமாகி விடும். இப்படிப்பட்ட கூந்தல் உடையவர்கள் கூந்தலை ஈரப்பதத்துடன் வைப்பதாகவோ, மென்மையாக்குவதாகவோ, சுருள் சுருளாக மாற்றுவதாகவோ சொல்லும் ஷாம்புகளை தவிர்க்க வேண்டும். இவை ஏற்கனவே எண்ணெய் பசையுடன் உள்ள மண்டைப் பகுதியை இன்னும் மோசமாக்கும்.

- Volumizing, strengthening or balancing எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஷாம்புகள் உங்கள் கூந்தலின் அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும்.
Daily Clarifying  ஷாம்புகள் தினசரி உபயோகத்துக்கு ஏற்றவை. ஆனால், அளவுக்கு மீறி உபயோகித்தால் மண்டையின் இயற்கையான எண்ணெய் பசை முற்றிலும் நீக்கப்படலாம் என்பதால் கவனம் தேவை.

* வறண்ட கூந்தலுக்கு...

வறண்ட கூந்தல் என்பது பிரச்னைக்குரிய கூந்தல். அதில் அரிப்பு, செதில்களாக உதிர்வது, முடி உதிர்வு போன்றவை வரும் வாய்ப்புகள் அதிகம்.

Strengthening, fortifying and volumizing ஷாம்புகளை தவிர்க்க வேண்டும்.
லேசான வறட்சியுடன் அரிப்போ செதில்கள் உதிர்வோ இல்லாத கூந்தலுக்கு  Promote moisture, hydration எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஷாம்புகளை உபயோகிக்கலாம்.

அளவுக்கதிகமாக வறண்டு போயிருக்கும் கூந்தலுக்கு மென்தால் மற்றும் டீ ட்ரீ கலந்துள்ள ஷாம்புகள் சிறந்தவை.

Nioxin கலந்துள்ள ஷாம்புகள் மிதமானது முதல் அதீத வறட்சி உள்ள கூந்தல்களுக்குப் பொருத்தமானவை.

- சல்பேட் கலந்துள்ள ஷாம்புகளை இவர்கள் உபயோகிக்கவே கூடாது. அது கூந்தலின் வறட்சியை மிகவும் அதிகப்படுத்தும்.



* காம்பினேஷன் கூந்தலுக்கு...

- மிக மென்மையான/பாதிக்கப்பட்ட கூந்தலுக்கு...

டீப் கண்டிஷனிங் செய்வதாக சொல்லப்படுகிற ஷாம்புகளை இவர்கள் தவிர்க்க வேண்டும். கூந்தல் மேலும் மோசமடைவதைத் தவிர்த்து, பத்திரமாகப் பராமரிக்க புரோட்டீன் அதிகமுள்ள ஷாம்புகளை உபயோகிக்கலாம்.

- சுருட்டையான/செதில்கள் உதிரும் கூந்தலுக்கு...

இவர்களுக்கு Anti Dandruff ஷாம்புகளே சிறந்தவை. ஆனால், அது கூந்தலின் வறட்சியை அதிகப்படுத்தும் என்பதால், இந்த ஷாம்பு உபயோகித்த பிறகு Smoothing, Moisturizing கண்டிஷனர் உபயோகிக்க வேண்டியது மிக அவசியம்.

- எண்ணெய் வடியும் மண்டைப் பகுதி/வறண்ட நுனிப்பகுதி கொண்ட கூந்தலுக்கு...
இந்த வகையான கூந்தலைக் கையாள்வது சற்றே சிரமமானது. மண்டைப்பகுதியில் படிந்துள்ள எண்ணெய் பசை மற்றும் அழுக்கை நீக்க அதற்கேற்ற ஷாம்புவையும், கூந்தல் வறண்ட நிலைக்கு மாறுகிற இடத்திலிருந்து, அதற்கேற்ப நுனிப்பகுதிகளுக்கு மட்டும் கண்டிஷனர் உபயோகிப்பதும் அவசியம்.

* ஷாம்புவின் பி.ஹெச் அளவு

கூந்தலின் இயற்கையான கருமை நிறத்தையும், அதன் பளபளப்பையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் நீங்கள் உபயோகிக்கிற ஷாம்புவின் பி.ஹெச் அளவைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பல ஷாம்புகளிலும் இந்த பி.ஹெச் அளவு குறிப்பிடப்படுவதில்லை. 0 முதல் 14 வரையிலான பி.ஹெச் அளவில் 7 எனக் குறிப்பிடப்பட்டிருந்தால் நடுநிலையானது. 7ஐ விடக் குறைந்தால் அமிலத்தன்மை அதிகம் கொண்டதாகவும், 7ஐ விட அதிகமாக இருந்தால் காரத்தன்மை அதிகம் கொண்டதாகவும்
அர்த்தம். ஷாம்பு கரைசலில் காணப் படுகிற ஹைட்ரஜனின் அளவே அதன் அமில, காரத் தன்மையின் அளவைத் தீர்மானிக்கிறது. அதிக பி.ஹெச் கொண்ட ஷாம்புகள் உங்கள் கூந்தலுக்கு உகந்தவை அல்ல.
 5 முதல் 7 வரையிலான பி.ஹெச் அளவே சிறந்தது.
* பி.ஹெச் அளவு ஏன் அவசியம்?

கூந்தல் என்பது  கியூட்டிகிள் எனப்படுகிற செதில்களால் ஆன மிக நுண்ணிய பகுதிகளாகும். தண்ணீரும் காரத்தன்மையும் கொண்ட பொருட்களை உபயோகிக்கும் போது இந்த செதில் பகுதிகள் திறந்து, அவற்றின் உள்பாகங்கள் வரை ஊடுருவி, பாதிக்கப்படும். கூந்தலை பாதிக்கிற இது போன்ற கடுமையான தாக்குதல்களில் இருந்து கியூட்டிகிள் பகுதி பாதுகாக்கப்பட வேண்டும். மிதமான அமிலத்தன்மை கொண்ட ஷாம்பு உபயோகிக்கும் போது கியூட்டிகிள் பகுதி மூடப்படுவதுடன், கூந்தல் தண்டுகள் பாதுகாக்கப்படும். கூந்தலின் வறட்சியும் தவிர்க்கப்படும்.

- எண்ணெய் பசையான மண்டைப்பகுதியும் வறண்ட நுனிகளும் கொண்டவர்களுக்கு பி.ஹெச்  பேலன்ஸ் உள்ள ஷாம்பு பெரிதும் உதவும்.

மிகவும் எண்ணெய் பசையான கூந்தல் உள்ளவர்கள், Panthenol கலந்த பி.ஹெச் பேலன்ஸ்டு ஷாம்புவை தேர்வு செய்ய வேண்டும்.

வறண்ட கூந்தலும் நுனிகள் வெடித்தும் காணப்பட்டால் Cetyl alcohol கலந்த பி.ஹெச் பேலன்ஸ்டு ஷாம்புவை தேர்வு செய்ய வேண்டும்.

- கலரிங் செய்யப்பட்ட கூந்தலுக்கு ஜோஜோபா ஆயில் மற்றும் வைட்டமின் ஈ கலந்த பி.ஹெச் பேலன்ஸ்டு ஷாம்புவை தேர்வு செய்ய வேண்டும்.

"ஷாம்பு கரைசலில் காணப்படுகிற ஹைட்ரஜனின் அளவே அதன் அமில, காரத் தன்மையின் அளவைத் தீர்மானிக்கிறது. அதிக பி.ஹெச் கொண்ட ஷாம்புகள் உங்கள் கூந்தலுக்கு உகந்தவை அல்ல. 5 முதல் 7 வரையிலான பி.ஹெச் அளவே சிறந்தது.
-------------------------
வல்லாரை 
மூலிகை மந்திரம்


ஞாபக சக்தி என்றதுமே நம் நினைவில் வரக்கூடியது வல்லாரை. மூளையின் செயல்பாட்டுக்கு அதிகம் துணையாகிறது என்பதன் அடையாளமாக, இதன் இலைகளே மனித மூளையின் உருவத்தைப் பெற்றிருக்கும். வல்லாரையின் பூக்கள் வெண்மை அல்லது சிவந்த நீல நிறம் கொண்டவை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மடகாஸ்கர், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் மலைப் பிரதேசங்களில் அதிகமாக வளர்கிறது. உலர்ந்த பகுதிகளிலும் வளர்வதுண்டு. இது ஒரு பூண்டு வகைத் தாவரம் ஆகும். Centella asiatica என்பது வல்லாரையின் தாவரப்பெயர் ஆகும். Indian pennywort என்று இதை ஆங்கிலமொழியில் குறிப்பது வழக்கம்.  மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த உதவும் என்பதால் கல்விக்கடவுளான சரஸ்வதியின் பெயரால் ‘சரஸ்வதி கீரை’ என்றும் அழைக்கிறார்கள்.

வல்லாரையின் மருத்துவச் செயல்பாடுகள் 

சூழ்நிலைகளுக்கேற்ப மனோநிலையை மாற்றிக் கொள்ளும் பலத்தைத் தரும் சிறப்பு கொண்டதாக வல்லாரை விளங்குகிறது. மனோநிலையை மாற்றும் Adaptogens என்ற மருத்துவ வேதிப்பொருட்கள் வல்லாரையில் மிகுதியாக அடங்கியதே இதற்குக் காரணம். இதனால் மன உளைச்சலை வெல்லும்  உடல்நிலை மாற்றத்தைத் தருவதாக வல்லாரை அமைகிறது. 

* பரபரப்பான சூழ்நிலையாக இருந்தாலும் சரி, வெப்பம், குளிர் போன்ற சீதோஷ்ண மாற்றங்களாக இருந்தாலும் சரி… அதற்கு ஏற்ப நம்மைத் தேற்றிக் கொள்ளவும் மாற்றிக் கொள்ளவும் வல்லாரை உதவுகிறது. மத்திய நரம்பு மண்டலங்களுக்கு அமைதி தருவதுடன், ரத்தநாளங்களில் அடைப்புகள் வராமலும் ரத்த ஓட்டம் தடைபடாமல் பாதுகாத்துக் கொள்ளவும் வல்லாரை மருந்தாகிறது. பல்வேறு நோய்களைத் தீர்த்து சுகம் தரும் ஆன்டிபயாட்டிக் பணியையும் திறம்பட செய்கிறது வல்லாரை. 

* உடலில் சேர்ந்து துன்பம் தரக்கூடிய நச்சுப் பொருட்களை நீக்கி சுகம் தருகிறது. மலமிளக்கியாக விளங்குகிறது. சிறுநீரை சீராக வெளித்தள்ளுவதற்கும் உதவுகிறது. தடைப்பட்ட மாதவிலக்கைத் தூண்டிச் சீர் செய்கிறது. குறைவான மாதவிலக்கு எனும் குறைபாட்டை நீக்கி முறையாக நடைபெறும்படி தூண்டிவிடுகிறது.

* இந்திய மருத்துவத்தில் வல்லாரையை மூளைக்கு பலம் தருகிற ஊட்டச்சத்துப் பொருளாகவும், ஞாபக சக்தியைத் தூண்டி அறிவை அபிவிருத்தி செய்யவும், மனக்குழப்பங்கள், மனஅழுத்தம் எனப்படுகிற மனம் சார்ந்த அத்தனைக் கோளாறுகளையும் களையவும், உடல்சோர்வைப் போக்கிப் புத்துணர்வு ஏற்படுத்தவும், உடலின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்படும் சரும நோய்களைத் துரத்தவும், குஷ்டநோயைக் குணப்படுத்தவும் வல்லாரை பயன்படுத்தப்படுகிறது.

‘அக்கரநோய் மாறும் அகலும் வயிற்றிழிவு
தக்கரத்தக் கடுப்புத் தானேகும் -
பக்கத்தில்
எல்லாரை யும்மருந்தென் றேயுரைத்து 
நன்மனையுள்
வல்லாரை யைவளர்த்து வை’
- இது வல்லாரை பற்றிய தேரையர் என்கிற சித்தரின் குணப்பாடம்.

நாவில் புண்களும் கொப்புளங்களும் தோன்றி எரிச்சலை ஊட்டுகிற வாய்ப்புண் வல்லாரையால் குணமாகும். கடுமையான வயிற்றுப்போக்கு காணாமல் போகும். வயிற்றை விட்டுவிட்டு வலிக்கச் செய்கிற பெருங்கழிச்சல் விட்டுச் செல்லும். ரத்தத்தோடும் வயிற்றுவலியோடும் வெளியாகிற ரத்த, சீதபேதிகளும் விலகிப் போகும். வல்லாரையால் கிடைக்கும் இந்த பலன்கள் நம் வீட்டுக்கு வருகிற விருந்தினருக்கும் கிடைக்க வேண்டும் என்பதால், அவர்களிடமும் வல்லாரையின் மகத்துவத்தைச் சொல்லி ஒவ்வொருவரும் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கச் சொல்ல வேண்டும் என்று மேற்கண்ட பாடலில் தேரையர் பரிந்துரைக்கிறார். 

நவீன மருத்துவத்தில் வல்லாரையின் பங்கு 

உடல் தேற்றும் டானிக்காகவும், வெப்பமுண்டாக்கி உள்ளுறுப்புகளைத் தூண்டிச் சீராகச் செயல்படச் செய்யவும் வல்லாரை உதவுகிறது என்று தெரிவிக்கிறது நவீன மருத்துவம். அறுவை சிகிச்சை, விபத்துகளால் ஏற்பட்ட கடுமையான புண்களையும் குணப்படுத்துகிறது வல்லாரை. தீ விபத்தால் ஏற்பட்ட இரண்டாம்நிலை மற்றும் மூன்றாம் நிலைப் புண்களையும் விரைந்து ஆற்றும் வலிமை வாய்ந்தது. இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான மக்களைப் பாதிக்கிற ரத்த ஓட்டக்குறைபாடு அதாவது, காலுக்குச் சென்ற ரத்தம் மீண்டும் சுழற்சியாக மாறாமல் தேக்கமுற்று வீக்கத்தையும் புண்களையும் உண்டாக்குகிற துன்பத்தையும் துடைக்கவல்ல ஓர் உன்னத சக்தியாக வல்லாரை விளங்குகிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 வல்லாரை இலையை கீரையாகவோ அல்லது நீரிலிட்டுத் தீநீராகவோ காய்ச்சிக் குடிப்பதால் உயர் ரத்த அழுத்தம் தணிகிறது. வல்லாரையிலிருக்கும் Asiaticoside தொழுநோய் உட்பட பல சரும நோய்களையும் போக்குவதாக இருக்கிறது. ஏசியாடிகோஸைட் எனும் வேதிப்பொருள் கல்லீரல், நுரையீரல், நரம்பு முடிச்சுகள் மற்றும் மண்ணீரல் ஆகிய பகுதிகளில் ஏற்படும் புண்களையும் கட்டிகளையும் ஆற்றவல்லதாக விளங்குகிறது. மேலும் காசநோய்த் தீர்ப்பான் ஆகவும், சர்க்கரை நோய் தடுப்பானாகவும் பயன் தருகிறது. வல்லாரையில் உள்ள ஏசியாடிகோஸைட் ரத்தத்தில் உள்ள சர்க்கரை, மொத்தக் கொழுப்பு, டிரைகிளிசரைட்ஸ் ஆகியவற்றையும் குறைக்கவல்லது.

வல்லாரை மருந்தாகும் விதம் 

* வல்லாரை இலையை ஒரு பிடி எடுத்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்து குடிப்பதால் சிறுநீர்த்தாரையில் உண்டான தொற்றுகள் குணமாகும்.

* வல்லாரைக் கீரையை சாறு எடுத்து அதை வடிகட்டாமல் அப்படியே அரை டம்ளர் குடித்தால் பால்வினை நோய்கள் குணமாகும்.

* வல்லாரைக் கீரையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். நன்கு உலர்ந்த பிறகு, காலை, மாலை என இருவேளை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள கீரிப்பூச்சிகள், நாடாப்புழுக்கள், மண்புழுக்கள் ஆகியன வெளியேறுவதோடு ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

* அன்றாடம் வல்லாரைக் கீரைச் சாற்றை வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வருவதால் விரைவாதம், நெறிக்கட்டிகள் ஆகியன குணமாகும்.

* வல்லாரை இலைக்கு சம அளவாக துளசி இலை, மிளகு இவற்றைச் சேர்த்து 100 மி.கி. அளவுள்ள மாத்திரைகளாக உருட்டி வைத்துக்கொண்டு தினம் இரண்டுவேளை சாப்பிட்டு வருவதால் மலேரியா காய்ச்சல், யானைக்கால் காய்ச்சல் ஆகியவற்றோடு இன்னபிற காய்ச்சல்களும் குணமாகும்.

* வல்லாரை இலைகளை ஐந்தாறு எடுத்து, அதனுடன் ஐந்து மிளகு, ஒரு பெரிய பல் பூண்டு சேர்த்து நன்கு அரைத்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் உண்டு, பின் பத்தியமாக பகலில் மோர் சாதம் சாப்பிட்டு வர வயிற்றுப்புண்கள், உடலின் வெளிப்பக்க புண்கள் ஆகியன குணமாகும். இதை ஒரு மண்டலம் கொடுப்பது உகந்தது.

* வல்லாரை இலைப்பொடியை 150 மி.கி. அளவு வரை எடுத்து தினம் ஒன்றுக்கு மும்முறை தேனுடன் கலந்து உள்ளுக்குக் கொடுத்து அத்துடன் மேலுக்கும் வல்லாரைப் பொடியைத் தூவி வருவதால் அல்லது பசுமையான இலையையே அரைத்து மேற்பூச்சாகவோ அல்லது 
தட்டாகவோ போட்டு வருவதால் நீண்ட நாட்களாக இருந்து தொல்லை தந்து வந்த ஆறாப்புண்களும் விரைவில் ஆறிப் போகும்.

* வல்லாரைப் பொடி 100 மி.கி. அளவோடு வெந்தயப் பொடி, அரிசித் திப்பிலி, மஞ்சள் தூள் (கொம்பு மஞ்சள்) சேர்த்து சம அளவு இரவு தூங்கச் செல்லும் முன் படிக்கிற குழந்தைகளுக்கு 500 மி.கி. வரை பாலுடன் சேர்த்துக் கொடுத்தால் ஞாபக சக்தி மிகுதியாகும். 

* பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மேற்சொன்ன முறையில் வல்லாரையைக் கொடுப்பதால் இதன் பாதிப்பை குணமாக்கலாம். ஆன்மிக விஞ்ஞானியாக விளங்கிய வள்ளலார், ‘வல்லாரையைக் கண்டேன் வாதத்தை வென்றேன்’ என்று சொல்லியிருப்பது இதற்குப் பெரும் சாட்சியாகும்.

"இந்திய மருத்துவத்தில் வல்லாரையை மூளைக்கு பலம் தருகிற ஊட்டச்சத்துப் பொருளாகவும், ஞாபகசக்தியைத் தூண்டி அறிவை அபிவிருத்தி செய்யவும், மனக்குழப்பங்கள், மன அழுத்தம் எனப்படுகிற மனம் சார்ந்த அத்தனை கோளாறுகளைகளையவும் வல்லாரை பயன்படுத்தப்படுகி
-----------------------
Courtesy
Kungumam doctor



--
--
Please visit my profiles at Bhoothatha-Blogspot<http://thatachariyar.blogspot.com

No comments: