Bhoo thatha's Blogspot

Search my older Blog

Sunday, November 15, 2009

temple-tiruneermalaichennai

அருள்மிகு அரங்கநாதப் பெருமாள் திருக்கோயில், திரு நீர்மலை, சென்னை 600 044
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 திருநீர்மலை பல்லாவரம் தாண்டி பம்மலை அடுத்து இருக்கும் புகழ்பெற்ற ஸ்தலம்.
திருநீர் மலையில் திருமங்கை ஆள்வார் பெற்ற அனுபவம்

           திருமகள் உறை மார்பனும், எங்கும் நிறைந்துள்ளவனும், எல்லாம் வல்ல
நற்குணங்களும் அமைந்த வைகுண்ட வாசனாய் அருள் மிகு பூமகள் நீளாதேவி உடனுறையும்
அருள் மிகு நாராயணன் இப்பூவுலகில் உள்ளோர் உய்யும் வண்ணம் அர்ச்சாவதாரங்கொண்டு
எழுந்தருளியுள்ள காட்சியுடன் பக்தர்களின் குறை தீர்க்கத் தோன்றி அருள்
பாலிப்பதாக பிரம்மாண்ட புராணம் குறிப்பிடுகின்றது.

             காண்டாரண்ய க்ஷேத்ரம் தர்பையும் மூலிகையும் நிறைந்த காடு எனவும்,
தோயாத்ரீ நீர்சூழ்ந்த மாமலை எனவும் இம்மலையை கிரிவலம் வந்த்து வழிபடுபவர்கள்
சகல தோஷமும் நோய் நீங்கியும், சகல  சௌபாக்கியமும் அடைவர் என்பது புராண வரலாறு.

               இக்கோயில் திருக்குளத்தில் க்ஷீர புஷ்கரணி, காருண்ய
புஷ்கரணி,சொர்ண புஷ்கரணி, சித்த புஷ்கரணி என்று தீர்த்தங்கள் உள்ளன .வைகுண்ட
ஏகாதசிக்கு மறுநாள் முக்கோடி துவாதசித் தீர்த்தவாரியன்று நீராடி மலையை வலம்
வருபவர்கள் சகல சௌபாக்கியமும் அடைவார்கள் என்பது புராண விளக்கம்.

                108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும்,திருமங்கையாழ்வார்,
பூதத்தாழ்வார் களால் மங்களாசாஸனம் செய்யப்பட்டதும் ஆன திருக்கோயிலாகும். பெருமை
மிகு இத் திருக்கோயிலில் நின்றான், இருந்தான்,கிடந்தான், நடந்தான் எனச் ஸ்ரீமன்
நாராயணன் நான்கு திருக்கோலங்களில் ஸ்ரீ நீர்வண்ணர், ஸ்ரீ சாந்த நரசிம்மர், ஸ்ரீ
அரங்கநாதர், ஸ்ரீ திருவிக்ரமர் என நான்கு நிலைகளில் அருள் காட்சி தருகிறார்.

நெஞ்சுக்கிருள்கடி தீபம், அடங்கா நெடும்பிறவி
நஞ்சுக்கு நல்ல வமுதம்; தமிழ் நன்னூல் துறைகள்
அஞ்சுக்கிலக்கியம்;ஆரண சாரம்; பரசமயப்
பஞ்சுக் கனலின் பொறி, பரகாலன் பனுவல்களே!

என்று திருமங்கை ஆழ்வாரரின் தனியன் இவரது மேதகு சிறப்பை நமக்குணர்த்தி
நிற்கும்.

          நெஞ்சில் அறியாமையைப் போக்கும் ஒளியாகப் பிறவித் தளை போக்கும்.
அருமருந்தாக தமிழ் மொழியின் ஐந்து பிரிவுகளுக்கும் இலக்கியமாக வேதத்தின் பொருள்
பிழிவாக பிற மதத்தினரின் ஆழமற்ற வாதப் பஞ்சுப் பொதிகளை எரிக்கும் அக் னிப்
பொறியாக புற சமயிகளின் காலனாக விளங்கும் கலியனின் பாசுரங்கள்- திகழ்வதாகக்
கூறப்படுவது அனுபவபூர்வமாக உணர்ந்து சொன்ன வார்த்தைகள்.

            நாலும் தெரிந்த இவரை ‘நாலுகவிப் பெருமாள்’ என்று மக்கள்
சிறப்பித்து மகிழ்ந்தனர். வீர மறவர் குலத்தில் பிறந்து எம்பெருமானின்
பாதாரவிந்த ஸ்பர்ச தீட்சையினால், வைணவ சிகாமணியாக மாறியவர்.

             திருஞான சம்பந்தர் இவரது மேதா விலாசத்தையும், கவித்துவத்தையும்,
பக்தி ஈடுபாட்டையும் கண்டு வியந்து தமது கைவேலைத் தந்து பாராட்டியவர்.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர். அன்றோ!

                நீலன்,கலியன், பரகாலன், ஆலிநாடன்,மங்கையர்கோன், மானவேல்
கலிகன்றி, மங்கை வேந்தன் இப்படிப் பலபெயர்களால் சுட்டப்படும்
திருமங்கையாழ்வார், 40-க்கும் மேற்பட்ட திவ்ய தேசங்களைத் தரினம் செய்து
1361-பாசுரங்களைப் பாடி நமக்கு உகந்த பேரருளாளர்.

                 அவரது அருளிச் செயல்கள் பெரிய திருமொழி, திருக்குறு, திரு
நெடுந்தாண்டகங்கள், திருவெழு கூற்றிருக்கை, பெரிய, சிறிய திருமடல்கள்
என்பனவாகும்

No comments: